கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சை கவனிக்காமல் பெண்கள் பேசிக்கொண்டு இருந்ததால் கோபமடைந்த அவர் மைக்கை தருகின்றேன் நீங்க பேசுங்க என பெண்களிடம் கடிந்து கொண்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (மார்ச் 17)மாலையில் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பெண்களிடம் வாக்குவாதம்
பொள்ளாச்சி ஜெயராமன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு முன் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் அவர் பேசுவதைக் கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், “நீங்க நாலு பேரும் பேசிட்டே இருக்கீங்க… நீங்க பேசுற மாதிரி இருந்தா சொல்லுங்க, நான் மைக்கைத் தர்றேன்” என்று மேடையிலேயே அவர்களைக் கடிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து தனது பேச்சைத் தொடர்ந்த அவர், “இன்னும் இரண்டு அமாவாசைகள் தாண்டுவதற்குள், இங்கிருந்து கிளம்பும் ‘எடப்பாடி எக்ஸ்பிரஸ்’ சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை அடையும்; அவர் மீண்டும் தமிழக முதல்வராவார்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனத்தை முன்வைத்து பேசிய அவர், “முதல்வரின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப் போகிறார்களாம், அதில் சமுத்திரக்கனி நடிக்கப் போகிறாராம். இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்டாலின் கோபாலபுரம் வந்துவிடுவார், அந்தப் படத்தில் அவரே நடிக்கலாம்” என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, உரையை விரைவாக முடிக்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தியடைந்த பொள்ளாச்சி ஜெயராமன், “முன்னாடி பத்து பேரு பேசிட்டு இருந்தா நான் எங்க போய் பேசறது?” எனக் கோபமாகக் கூறிவிட்டு, உடனடியாக ‘நன்றி வணக்கம்’ தெரிவித்துவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.
