அரசியல் வாரிசும் வாரிசு அரசியலும் – பகுதி 3

Published On:

| By Minnambalam Desk

Family Politics

குடும்ப ஆதிக்கத்தை முடிப்பதற்கு குடும்பமாக வர வேண்டும்!

. குமரேசன்

“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், புதிய தேசிய அரசுகள் உருவாயின. இவற்றில் பெரும்பாலான நாடுகள் தங்களது கடந்தகால மன்னராட்சி/சர்வாதிகார ஆட்சிகளின் அனுபவங்களுக்கு மாறாக, ஜனநாயக ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்தன. இத்தகைய முன்னெடுப்புகள் இருந்தபோதிலும், இந்த நாடுகள் வாரிசு அரசியல்வாதிகள் போன்ற உயர் வர்க்கத்தினர் அதிகரித்திருப்பதைக் காண்கின்றன. பரம்பரை சொத்துகளாக வரித்துக்கொள்ளும் குடும்பப் பெயருக்கான அங்கீகாரம், அரசியல் தொடர்புகள், நிதி ஆதாரங்கள் போன்றவை அரசியல் மூலதனமாக, வாரிசுகள் அல்லாதவர்களை விட சாதகமான ஒரு தேர்தல் ஆதாயத்தை வாரிசுகளுக்கு அளிக்கின்றன. Political Heirs and the Politics of Inheritance – Part 3

இந்தப் போக்கு, அரசியல் சமநிலை போன்ற ஜனநாயகக் கொள்கைகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. குடும்பப் பின்னணிக்காக குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகள் காரணமாக, ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதித்துவம் பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது. தேர்தல்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற உந்துதலில், அரசியல் கட்சிகள் மற்றவர்களை விட இவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த முன்னுரிமை அளிக்கின்றன,” என்று தன் ஆய்வறிக்கையைத் தொடங்குகிறார் முடாசிர் பஷீர் பாட்.

தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல் கட்சிக் களத்திலும் இந்தச் சிறப்பு முன்னுரிமை வேலை செய்கிறது. குறிப்பாக, குறிப்பிட்ட சமூக அடிப்படையில் (நமது நாட்டைப் பொறுத்தவரையில் சாதி அடிப்படையில்) கட்டப்பட்ட கட்சிகளில், தலைவர்களின் வாரிசுகளே அடுத்த தலைவர்களாகக் கொண்டுவரப்படுவதையும், அது ஏற்கப்படுவதையும் காண முடிகிறது. குறிப்பிட்ட வட்டாரங்களில் அந்தச் சமூகங்களின் மக்கள்தொகை எந்த அளவுக்கு மிகுதியாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, அந்தக் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் மிகுதியாகிறது.

முழுமைபெறாத புரட்சி

நவீன ஜனநாயக யுகத்தில், பழைய உறவின்முறைகளுக்குப் பாத்தியப்பட்டதாக, வாரிசு அரசியல் ஏற்கப்படுவதன் சமூக உளவியல் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். முடாசிர் குறிப்பிடும் காலக்கட்டத்தில், விடுதலைப் புரட்சிகளின் கனிகளாக உருவான புதிய சுதந்திர நாடுகளில் நவீன முதலாளித்துவ சமுதாயம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், முந்தைய நிலவுடைமைச் சமுதாய அமைப்புக்கு “முற்றும்” போடப்படவில்லை. சொல்லப்போனால் புதிய முதலாளித்துவத்துக்கும் பழைய நிலவுடைமைத்துவத்துக்கும் இடையே சமரசம் செய்துகொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் உருவான, நிலவுடைமைத்துவத்திற்கு விடைகொடுக்கப்பட்ட சில சமுதாயங்களில் புரட்சி நடந்து சமூகவுடைமை (சோசலிசம்) அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. முதலாளியச் சுரண்டலுக்கான வாயில்கள் அடைக்கப்பட்டன. அந்த அனுபவங்களிலிருந்தே, பல நாடுகளில் சமூகவுடைமைக்கான வாயில்களை அடைக்கும் நோக்கத்துடன் சமரசங்கள் செய்துகொள்ளப்பட்டன. இந்திய மண்ணிலும் நடந்த இந்த சமரசத்தால், நிலவுடைமைத்துவத்தின் வலுவான வேர்களாகிய சாதியம், பெண்ணடிமைத்தனம், பரம்பரை ஆதிக்கம், கிராமிய வாழ்க்கை முறை, மத நிறுவனங்களின் பிடிமானம் இறுகுவது, சமூக அசைவுகள் சுருங்கிப்போவது,  தனிமனித விசுவாசம்/பணிவு ஆகியவை எங்கும் பரவியுள்ளன. இவற்றை மண்ணின் மாண்புகள் என்று போற்றுகிற, அதன் மூலம் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டுகொள்ளாத மனப்பாங்கு ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கிளை வேர்தான் குடும்ப/வாரிசு அரசியல்.

எதிர்மறைத் தாக்கங்கள்

மக்களாட்சி முறையில் இது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? குறிப்பிட்ட அரசியல்வாதியின் கொள்கை உறுதி, செயல்திறன் ஆகிய தகுதிகளை விட, எந்தக் குடும்பம் சார்ந்தவர்  என்ற தகுதிக்காகவே அவரிடம் அதிகாரம் கையளிக்கப்படுகிறது. இதில் தகுதிசார் தலைமை புறக்கணிக்கப்படுகிறது. அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தலானாலும் சரி,  தலைமைப் பொறுப்பை அளிப்பதற்கான உட்கட்சித் தேர்தலானாலும் சரி, வாக்களிப்பவர்கள் தேர்வு செய்வதற்குரிய எல்லை சுருக்கப்படுகிறது –நியாயமான ஜனநாயகப் போட்டி வெறும் பெயரளவுக்கானதாக மாற்றப்படுகிறது. உள் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் விதியால்தான் பல கட்சிகள் உள் தேர்தல் ஏற்பாட்டையே கொண்டுவந்தன! இல்லையேல் நியமனத் தலைவர்கள்தான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருப்பார்கள். நடைமுறையில், இந்த உட்கட்சி ஜனநாயகம் கூட, வாரிசு முறையில் வேட்பாளர் நிறுத்தப்படுவதால், போட்டியிடும் பலரிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மறுப்பதாகிவிடுகிறது.

அதிகாரம் குறிப்பிட்ட குடும்ப வட்டத்திற்குள் குவிக்கப்பட்டு, அரசியல் பன்மைத்துவம் கீழிறக்கப்படுகிறது. இதன் துணைக் கிளையாக ஊழல் ஊறிப் போகிறது. வாய்ப்புகள் அளிப்பதில் வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு தட்டிக் கேட்க முடியாததாகிறது. உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கும் கடமைப்பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது, வெளிப்படைத்தன்மை மறைந்துவிடுகிறது. உள் ஜனநாயகம் வலுவிழந்து, லட்சியங்களோடு இயக்கத்தில் இணைந்த புதியவர்கள் ஊக்கமிழக்கிறார்கள்.

இவை ஒவ்வொன்றுக்கும் சாட்சிகளை எடுத்துக் காட்டலாம். ஆனால், இது சரியா தவறா என்று வாதிடாமல் “மற்ற கட்சிகள் இப்படிச் செய்யவில்லையா” என்ற கோணத்திலேயே பதில்கள் தரப்படும். ஆகவே, அவர்களுக்கு ஆறுதலாக, வாரிசு முறை அரசியலின் நேர்மறைத் தாக்கங்கள் பற்றி சில பதிவுகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

நேர்மறைப் பயன்கள்

வாரிசு என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியே தலைமைக்கு ஒருவர் வருகிறார் என்றாலும், அவர் பொதுப் பிரச்சினைகளிலும் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளிலும் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பதே முக்கியம். உதாரணமாக, மொழி, சமூகநீதி, அரசின் மதச்சார்பின்மை போன்றவற்றில் ஜனநாயக இயக்கங்களோடு சேர்ந்து நிற்கிறார் என்றால் அது வரவேற்கத் தக்கதுதானே? அந்தக் கட்சியின் தொண்டர்களையும் அந்தச் சிந்தனைகள் சென்றடையும் அல்லவா? –இப்படியொரு வாதம் முன்வைக்கப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

“வாரிசு என்பதாலேயே வாய்ப்புகள் தரப்படக்கூடாது என்பது போலவே, வாரிசு என்பதாலேயே வாய்ப்புகள் மறுக்கப்படவும் கூடாது,” என்ற கருத்தையும் தள்ளிவிடுவதற்கில்லை. அந்த வாய்ப்புகள் ஜனநாயகப் பூர்வமாக, இயக்கத்திற்கான பங்களிப்புகள் அடிப்படையில் தரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தள்ளிவிடுவதற்கில்லை. சில தலைவர்களின் பிள்ளைகள் வேறு கட்சியில் இணைந்து செயல்படுவதும் உண்டு. அது கொள்கை வேறுபாட்டின் காரணமாக நிகழுமானால் நல்லது. சொந்தக் கோபத்திற்காக நிகழுமானால் விமர்சனத்திற்கு உரியது. சில குடும்பங்களில், வாரிசுகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பெரிய கட்சிகளில் இணைந்திருப்பார்கள். எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அந்தக் குடும்பத்திற்கான ஆதாயத்தை உறுதிப்படுத்துகிற ஏற்பாடாக அது இருக்கும்!

அமைப்புக்குள் தலைமை மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை இது உறுதிப்படுத்துகிறது. குறிப்பிட்ட குடும்பத்தின் பெயரோடு இணைந்த சமூக ஆதரவுத் தளம் தொடர்கிறது. இது  தேர்தல் வெற்றிக்கும் உதவுகிறது. தலைவர்களோடு நெருங்கிப் பழகிய சூழலால் கட்சி நிர்வாகம் தொடர்பான அனுபவம் கிடைக்கப் பெற்றவர்களாக வாரிசுகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகிறார்கள்.  அது மற்ற தொண்டர்களின் விசுவாசத்தையும் வளர்க்கிறது.

இன்னொரு மாறுபட்ட உண்மையும் சுட்டிக்காட்டப்படுகிறது. தலைமை மட்டத்திலும், உள்ளூரளவிலும் பல குடும்பங்களில் பெண்களின் அரசியல் நுழைவுக்கு வாரிசு முறை வழியமைக்கிறது. பொதுவாகப் பெண்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமைவதில்லை. இதைப் பயன்படுத்தி அரசியலுக்கு வருகிற பெண்கள் படிப்படியாகத் தங்களின் சொந்த ஆளுமையை நிறுவிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. அதே போல, ஓரத்தில் தள்ளப்பட்ட சமூகக் குழுக்கள் மைய இடத்திற்கு வருவதும் வாரிசு அரசியலால் ஓரளவுக்கு சாத்தியமாகிறது.

“புதிய சமூகக் குழுக்கள் அரசியலில் நுழைவதற்கு ஏற்கெனவே அதிகமான தடைகள் உள்ள சமநிலையற்ற அரசியலமைப்பில், அவற்றில் சில தடைகளைத் தாண்டுவதற்கு ஒரு முறைசாரா ஆனால் இரண்டாவது மிகச்சிறந்த வழிமுறையாக வாரிசுமுறை அரசியல் மாறியுள்ளது,” என்கிறார் ஆய்வாளர் காஞ்சன் சந்திரா (ஜனநாயக வாரிசுமுறை:சமகால இந்திய அரசியலில் அரசு, கட்டசி மற்றும் குடும்பம் –2016). முன்னணி அரசியல் ஆய்வாளரும், இனக்குழுக்களின் அடையாள அரசியல் குறித்த ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துபவருமான இவர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிகிறார்.

இத்தகைய குரல்கள் ஒலிக்கிறபோது செவிகளை மூடிக்கொள்ள முடியாது. அதேவேளையில், களப்பணியாற்றிக் கட்சியில் முன்னிடங்களுக்கு வருகிற ஜனநாயக அடிப்படைக்கு முழு மாற்றாக இதை முன்வைக்கவும் முடியாது.

குடும்பமாக வர வேண்டாமா?

அரசியலில் மட்டுமல்லாமல், சமூகவியலிலும் முக்கியத்துவம் பெறுகிற கேள்வி இது. அரசியல் என்றால் ஒரு குடும்பத்தில் ஒரு தனிமனிதரின் ஈடுபாடாகத்தான், குறிப்பாக ஆணின் ஆட்ட மைதானமாகத்தான், இருந்தாக வேண்டுமா? அரசியல் வாழ்வில்  சிலர் மட்டுமே அதற்காக வாழ்க்கைப்பட்டவர்கள் போலப் பங்கேற்கிறார்கள். அரசியல் வர்க்கம் என்று அவர்களைச் சொல்லத்தக்க அளவுக்கு நிலைமை இருக்கிறது. குடிமக்களில் பெரும்பாலோர் நேரடி அரசியலில் பங்கேற்பதில்லை, முதலிலேயே பார்த்தது போலத் தேர்தல் வாக்குச் சாவடியைவிட்டு வெளியே வருவதோடு முடித்துக்கொள்கிறார்கள். ஆனால், தேசத்தின் அரசியல் உடல் முழு நலத்தோடு இயங்கிட வேண்டுமானால், ஒட்டுமொத்த சமுதாயமாக இல்லையென்றாலும், பெரும்பகுதி மக்களின் பங்கேற்பு ஓர் இன்றியமையாத தேவை.

இது, குடும்பம் குடும்பமாகப் பங்கேற்பதன் தேவையையும் உணர்த்துகிறது. பல கட்சிகளில், தொண்டர்கள் தங்களுடைய குடும்பங்களின் ஆதரவை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அது பெரும்பாலும், தேர்தலில் அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் செய்வதற்கான வேண்டுகோளாகவே இருக்கும். மாறாக, எவ்விதக் கட்டாயமும் இல்லாமல், அவரவர் சுயமுடிவின்படி தேர்ந்தெடுத்து அரசியலில் பங்கேற்க வேண்டும். அதற்காகஅறைகூவல் விடுக்கப்படுவதை நானறிந்த வரையில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. குடும்பமே அரசியலில் ஈடுபட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள், குடும்பமே கட்சிக்குள் வந்து செயல்படுவதைப்  பெருமிதத்தோடு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட பங்கேற்பு உள்ள வீடுகளில், குடும்ப ஜனநாயகமும் வேரூன்றியிருக்கும். எந்தவொன்றிலும் கூட்டாகச் சேர்ந்தே முடிவெடுக்கப்படும். இது வாரிசுரிமை அரசியலல்ல. அதற்கு அப்பாற்பட்ட வளமான அரசியல்.

கம்யூனிஸ்ட் கட்சிகளிலும், இடதுசாரி இயக்கங்களிலும் குடும்ப வாரிசுகள் அரசியல் களத்திற்கு வருவதும், ஏன் முன்னணி இடங்களுக்கும் வருவதும் நடப்பதுண்டு. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருவர் முன்னணி இடங்களுக்கு வருவது, பெரும்பாலும் அவர்கள் எந்த அளவுக்கு வேர்மட்டத்தில் சக தோழர்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள், எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள், எந்த அளவுக்கு சித்தாந்தப் பிடிப்புடன்  இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். இன்னாரின் பிள்ளை என்பது ஒரு அறிமுகமாக இருக்குமேயன்றி, அதுவே அடித்தளமாகிவிடாது. ஆகவே இக்கட்சிகளில், ஒரு தலைவரின் குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் உயர் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறபோது அது வாரிசு அரசியலாகப் பார்க்கப்படுவதில்லை, விமர்சிக்கப்படுவதில்லை. மாறாக, மற்ற கட்சிகளிலும் இதைப் பின்பற்றலாமே என்று சொல்லத்தக்க முன்னுதாரணமாகத்தான் இது  அமைகிறது.

வாரிசு அரசியலே ஒரு நோய் என்று முகக்கவசம் அணிந்துகொள்வதால் பயனில்லை. இதற்கு நெடுங்கால வரலாற்றுப் பின்னணியும், ஆழமான சமூகப் பண்பாட்டு அடித்தளமும் இருப்பதை அங்கீகரித்தாக வேண்டும். இவ்வாறு சொல்வது, உழைக்கிறவர்களின் தகுதிகளை ஒதுக்கிவிட்டு பிறப்பின் அடிப்படையில் இடமளிக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்கல்ல.நிகழ்காலத்திலும் வாரிசு அரசியல் நிலைபெற்றிருப்பதற்கான சமூகக் காரணிகளைப் புரிந்துகொண்டு அவற்றைக் கடந்தகாலமாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்ற திசையில் இந்த விவாதங்கள் சென்றாக வேண்டும். முழுமையான மக்களாட்சி இலக்கை அடையும் வழி அதுதான்.

அரசியல் இயக்கங்கள், தங்களுடைய கடமைகளில் ஒன்றாக, தேர்தல் பங்களிப்போடு நின்றுவிடாமல் ஜனநாயகத்தின் பன்முகச் சிறப்புகளையும், தேவைகளையும் மக்களிடையே பரப்ப வேண்டும். வாரிசுத் திணிப்பைப் புறக்கணித்து, குடும்பத்தின் பங்கேற்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமாகத் திகழும் இயக்கங்களின் ஒளிக்கீற்றை எடுத்துக்கொண்டு கட்சிக்குள் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். இதெல்லாம் ஒரு பேராசைச் கனவாக இருக்கலாம்.  ஆனால் நிறைவேற வேண்டிய கனவு. நம் குடும்பங்களும் வாரிசுகளும் முழுமையான மக்களாட்சி அரசியலின் மகத்துவத்தை வாழ்க்கை அனுபவமாகப் பெறுவதற்கான நம்பக வழியைக் கண்டுபிடிக்கும் “யுரேகா யுரேகா” கனவு.

(நிறைவு)

அரசியல் வாரிசும் வாரிசு அரசியலும் – பகுதி 1
அரசியல் வாரிசும் வாரிசு அரசியலும் – பகுதி 2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share