கோவை இருகூர் பகுதியில் பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் குடும்ப சண்டையில் பெண் கத்தி கூச்சலிட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை இருகூரில் நேற்று (நவம்பர் 6) இரவு காரில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் பெண் கடத்தப்பட்டதாக புகார்கள் எதுவும் வரைவில்லை என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் கோவையில் பெண் கடத்தப்படவில்லை. கணவன் மனைவி இடையே நடந்த சண்டையில் பெண் கூச்சலிட்டது தெரிய வந்துள்ளது
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நேற்று (நவம்பர் 6) தேதி மாலை சுமார் 7 மணியளவில், கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய ஒரு நபர் கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AG புதூர் ரோட்டில் ஒரு காரில் ஒரு பெண்ணை யாரோ கடத்துவதாக தகவல் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கோவை மாநகர கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளில் ரோந்திலும் மற்றும் சுற்றுக்காவலிலும் இருந்த காவலர்கள் மற்றும் அனைத்து காவல் அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் என்பதும், கணவன் மனைவிக்கிடையே பொருட்கள் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்பதும், அப்பொழுது AG புதூர் ஜங்ஷன் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களுக்குள் வாய்த்தகராறு நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாய்த்தகராறில் இருந்தவாறே வண்டியை எடுத்துச் செல்லும்போது கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கூச்சலை கண்ட அங்கிருந்த ஒரு நபர், யாரோ ஒரு பெண்ணை காரில் கடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணி, உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் அளித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும், இந்நிகழ்வில் காரில் சம்பவம் நடந்ததாக தெரிவித்த நபரையும் கண்டறிந்து விசாரணை நடத்தியதில், அவரும் காரில் யாரும் கடத்தப்பட்டதாக தான் பார்க்கவில்லை எனவும், காரில் இருந்தவர்கள் அதிலிருந்த ஒரு பெண்மணியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்போது கூச்சலிட்டதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
