தமிழக வெற்றிக் கழகம் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 10 ) விசாரித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பரப்புரை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் எஸ்.ஐ.டி குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 10) நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பிலும், தவெக தரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசுத் தரப்பில், மக்கள் உயிரிழந்த பின் விஜய் கரூருக்கு சென்று மக்களை பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் விஜய் கரூர் சென்றாரா? இல்லையா என்பது இந்த வழக்கிற்கு தொடர்பில்லாதது என கூறினர்.
தொடர்ந்து தவெக தரப்பில், ‘சம்பவம் நடந்த அன்று விஜய் கரூரில் இருந்தால் மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடலாம் என்பதால், காவல்துறையினர்தான், அங்கிருந்து கிளம்ப சொன்னார்கள். காவல்துறை உதவியுடன் தான் அங்கிருந்து விஜய் வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களையும் தவெகவினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும். எஸ்.ஐ.டி விசாரணை வேண்டாம். முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் உச்ச நீதிமன்றமே ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் 12 மணிக்கு விசாரணை தொடங்கிய நிலையில், தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.