பாமக மோதல்: ஆடிட்டர் குருமூர்த்தியின் சமாதான பேச்சு என்னாச்சு? இன்று அறிவிக்கும் டாக்டர் ராமதாஸ்!

Published On:

| By Minnambalam Desk

PMK Ramadoss

பாமக உட்கட்சி மோதலில் தலையிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜகவின் அதிகார மையம் ஆடிட்டர் குருமூர்த்தியின் முயற்சிகள் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஜூன் 10-ந் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளார். PMK Clash: What Happened to Auditor Gurumurthy’s Peace Talks?

பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் தொடருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி அறிவித்தார். இதனை அன்புமணி ஏற்க மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து ராமதாஸ் கோஷ்டி, அன்புமணி கோஷ்டி என பாமக இரண்டாக பிளவுபட்டது. பாமகவின் 80%-க்கும் அதிகமான மாவட்ட நிர்வாகிகள் அன்புமணியை ஆதரிக்கின்றனர்; பாமகவின் அடிப்படை அமைப்பான வன்னியர் சங்கம், ராமதாஸை ஆதரிக்கிறது.

இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்த ராமதாஸ் மகள்கள் ஶ்ரீ காந்தி, கவிதா உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பாமகவின் உட்கட்சி பிரச்சனையில் தலையிட்டுள்ளனர். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ஜூன் 5-ந் தேதி டாக்டர் ராமதாஸை இருவரும் சந்தித்து பேசினர். இதனையடுத்து சென்னை வந்த டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரை மீண்டும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், பாமக குறித்து நீங்கள் எதிர்பார்க்கிற நல்ல செய்தி வரும்.. செய்தியாளர்களை ஜூன் 10-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து விரிவாக பேசுகிறேன் என தெரிவித்திருந்தார். இதனால் டாக்டர் ராமதாஸின் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share