உழைக்க தயாராக இல்லாத அன்புமணி.. கெஞ்சி கூத்தாடி போட்டியிட்ட சவுமியா- ராமதாஸ் அட்டாக்

Published On:

| By Minnambalam Desk

Ramadoss

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், உழைப்பதற்கு தயாராக இல்லாதவர்; அவரது மனைவி சவுமியா, தருமபுரி தொகுதியில் என்னிடம் கெஞ்சி கூத்தாடிதான் போட்டியிட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். PMK Clash: Dr. Ramadoss Slams Anbumani and Sowmiya

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான், ஒருநாள் யாரையும் சந்திக்க விரும்பாமல் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜெகத்ரட்சகன் ஹோட்டலில் தங்கி இருந்தேன். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட சவுமியா (அன்புமணி மனைவி), அந்த ஹோட்டலுக்கு வந்தார். அவர், ‘மாமா’ என்றார். நானும் ‘ஏம்மா’ என்றேன்.

அன்புமணிக்கு தலைவர் பதவி

தொடர்ந்து பேசிய சவுமியா, அடுத்த புதன்கிழமை நாள் நல்லா இருக்கிறது.. மண்டபம் பார்த்துவிட்டேன்.. தலைவரை மாற்றிவிடலாம் என்றார். ஜிகே மணி, ஓய்வறியா உழைப்பாளி; தியாகச் செம்மல். அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றிவிடலாம் என்றார்.

நான் ஏதும் சொல்லாமல், சொல்லுகிறேன் என்று மட்டும் சொன்னேன். மறுநாள் ஜிகே மணி வந்தார்.. அவர், தலைவர் பதவியை மாற்றிவிடலாம்.. எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை.. மைத்துனரும் தம்பியும் எதை செய்தாலும் 45 நாட்கள் கழித்து செய்ய சொல்கின்றனர் என்றார். நானும் சவுமியா வரட்டும்.. சொல்லி விடுகிறேன் என்றேன். சவுமியாவிடமும் சொன்னேன்.. அவரும் ‘சரி மாமா’ என்றார்.

வீட்டுப் பெண்கள் அரசியலுக்குள் இறங்க தடை

அந்த நாளும் வந்தது.. அன்புமணிக்கு முடிசூட்டும் விழா நடந்தது. அப்போது ஆரத்தழுவி, ஆனந்த கண்ணீர் வடித்தோம். ஆனந்த கண்ணீரை வடித்து பேசும்போது சொன்னேன், என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிகளில் அரசியலில் ஈடுபட கூடாது என்று சொன்னேன். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

என் ஜாதகத்தை வைத்து…

கோவில் கோவிலாக செல்வது சவுமியாவின் உரிமை. அவரது வேண்டுதல் என்ன என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய ஜாதகத்தை ஆத்தூரில் உள்ள ஒருவரிடம் இரண்டு பெண்கள் கொடுத்து பார்த்தனர். எனக்கு ஜோதிடத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை.

அரசியலில் வாரிசு என்பதே இல்லை

2026 தேர்தலுக்குப் பின்னர் அன்புமணிதான் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளப் போகிறார். அரசியலில் வாரிசு என்பதே கிடையாது. அன்புமணிக்கு பின்புலத்தில் பாஜக உட்பட யாரும் இல்லை. அவர் யார் சொல்வதையும் கேட்கமாட்டார்.அன்புமணியிடம் அந்த இரு ஜாம்பவான்கள் பேசியும் ( ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி) பயனில்லை.

உழைக்க தயாராக இல்லாத அன்புமணி

முயலுக்கு 4 கால்கள் என அனைவரும் சொன்னால், அன்புமணியோ 3 கால்கள்தான் என்பார். 3 கால்கள் இல்லை.. 4 கால்கள் என ஒப்புக் கொண்டால் பிரச்சனையே முடிந்துவிடுமே.

40, 50 தொகுதிகளை தேர்ந்தெடுத்து உழைத்தோம். அதற்கு அன்புமணி ஒத்துழைப்பு தரவில்லை. இதற்கு உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை.

அண்ணாமலைக்கு விருந்து

தேர்தல் நேரத்தில் அன்புமணியை அழைத்து தருமபுரியில் யார் போட்டியிடுவது என்றேன். நான் என்றார். அடுத்த நாள் காலையில் திடீரென பாரத் மாதா கீ ஜே என்ற கோஷம் கேட்டது. வந்தவருக்கு (அண்ணாமலை) பதார்த்தங்களுடன் விருந்து வைத்தனர். இதுவும் எனக்கு தெரியாது.

சவுமியா போட்டியிட்டதன் பின்னணி

இதன் பின்னர் தருமபுரியில் சவுமியா போட்டியிடு வதாக அன்புமணி கூறினார். நான், பொதுக்குழுவில் நம்ம குடும்ப பெண்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என சொன்னேன்.. அதற்கு எதிர்மாறாக சவுமியா தேர்தலில் நிற்கக் கூடாது என்று சொன்னேன். பின்னர் தருமபுரிக்கு வேட்பாளரையும் அறிவித்துவிட்டோம். இதன் பின்னர் என் சின்ன மகள், பெரிய பேரன் எல்லோரும் என்னிடம் கெஞ்சி,கூத்தாடி- வாதாடிய பின்னர், என்னை கையெழுத்துப் போட வைத்தனர். அதனால் சவுமியா, போட்டியிட்டார். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share