பிரதமர் நரேந்திர மோடி நாளை மார்ச் 11-ந் தேதி திருச்சி வருகை தருகிறார்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் சுமார் 10,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு மாலை சுமார் 5:45 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.
இவை,
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு
- மசகு எண்ணெய் உற்பத்தி
- கிராமப்புற இணைப்பு
- நெடுஞ்சாலை மேம்பாடு
- ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியதாகும்.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.
இந்தத் திட்டம் 8.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயுவை வழங்கும் மற்றும் 201க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவும்.
சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் பிரதமர் திறந்து வைப்பார். இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். தேசிய நெடுஞ்சாலை 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இது தமிழ்நாடு மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.
