ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பிரமரின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்டோபர் 2) தனது எக்ஸ் பதிவில், “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!” என தெரிவித்துள்ளார்.