‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜய் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலை மத்திய அரசு நேற்று அறிவித்தது. சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருதும், சிறந்த திரைக்கதை விருதும் பெற்றுள்ளது. சிறந்த இசைமைப்பாளர் விருதை வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பெற்றுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது சுதிப்தோ சென்னுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பிரசந்தனு மொஹபத்ராவுக்கு வழங்கப்பட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருது நடுவர் மன்றம், சங்க பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், உண்மை மற்றும் நாம் மதிக்கும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.