மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Order to pay additional Rs.25 lakh AjithKumar family
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்தார்.
அஜித்குமார் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் மாரிஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மற்றும் மரியா கிளாட் அமர்வு, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 22)விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், “அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்தீஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் 7 நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
மேலும் சட்டவிரோத காவல் மரணத்தால் உயிரிழப்பவரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், “தமிழக அரசு 7.5 லட்சம் ரூபாய், அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகியவற்றை வழங்கியுள்ளது.
கூடுதலாக 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். Order to pay additional Rs.25 lakh AjithKumar family