பதவிக்காக எதையும் செய்ய பன்னீர்செல்வம் துணிந்துவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று (பிப்ரவரி 20) சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ., “ஜெயலலிதா எம்.ஜி.ஆர் ஆசியுடன் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்” என்று கூறினார்.
இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 21) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “ தம்பி ஐயப்பன் முதல்வரை வாழ்த்திப் பேசுவது, அவர் கட்சியில் போய் சேருவது எல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
அண்ணன் ஓபிஎஸ்-க்கு எவ்வளவோ எண்ணங்கள் இருக்கலாம், அவர் இன்னும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இன்னொரு கட்சிக்கு கூட சொல்லலாம். ஆனால், அம்மா இருந்த வரை பரதனாக நடித்துவிட்டு, அம்மா மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆக்கியவர்களுக்கு, அந்த கட்சிக்கு, அந்த ஆட்சிக்கு எதிராக 2017-ல திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 2017 பிப்ரவரி 18 அன்று எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ்.
திரும்பவும் பெருந்தன்மையாக பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு, அண்ணன் இபிஎஸ் அவர்களோடு பேசி அவரை துணை முதல்வர் ஆக்கினார்கள்.
என்ன ஒன்று தெரிகிறது என்றால் நண்பர் ஓபிஎஸ் தனக்குப் பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்பது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. அவரை 1999ல் இருந்து எனக்கு நன்றாகத் தெரியும். அவர் திமுகவின் முதலமைச்சரை வாழ்த்திப் பேசலாம், அவரைப் போய் சந்தித்து நலம் விசாரிக்கலாம், 2017 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி அவரைப் பதவியிலிருந்து இறக்கியது ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஏனென்றால்அவர் திமுகவில் போய் சேரட்டும், அங்க அவர் பதவிக்கு வரலாம், வர முடியாமல் போகலாம்… எல்லாம் மக்கள் தீர்மானிப்பார்கள். உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும், அதற்கான பதிலை அவர்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.
