ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தவித்த இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். Operation Sindhu: 110 Indian Students Evacuated from Iran
ஈரான் மீது இஸ்ரேல் ஜூன் 13-ந் தேதி முதல் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகள் ஆகியவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ஈரானும் பதிலடி தந்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானில் படித்து வரும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு Operation Sindhu என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக டெஹ்ரானில் இருந்து 110 மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். டெஹ்ரானில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று காலை 110 மாணவர்களும் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள், டெல்லி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். இன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.