நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இவரைத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் (44) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் உட்பட வெளி மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவியிடம் தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் (44) தனியாக அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் தனியார் தங்கும் விடுதியில் வைத்து யூனிவர்சிட்டியில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து அலறியடித்து வெளியேறி உள்ளார்.
இதில் பாதிக்கபட்ட மாணவி உதகையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அரசு மருத்துவர் ஓம் பிரகாஷை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
