8வது சம்பளக் குழு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. 8வது சம்பளக் குழு (8th Pay Commission) அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பளம் எவ்வாறு அதிகரிக்கும், என்னென்ன சலுகைகளைப் பெறுவார்கள் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி சைபர் மோசடியாளர்கள் தீவிரமாக அரசு ஊழியர்களை குறிவைத்து வருகின்றனர். இந்த மோசடி செய்பவர்கள் வாட்ஸ் அப்பை (Whatsapp Scam) பயன்படுத்தி மக்களை தங்கள் வலையில் விழவைக்கிறார்கள்.
8வது சம்பளக் குழு என்ற பெயரில் மோசடி:
தற்போது பல மத்திய அரசு ஊழியர்களுக்கு (central govt employees) வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பப்படுகிறது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு அவர்களின் சம்பளத்தைக் கண்டறிய ஒரு கோப்பைப் (File) பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அது கூறுகிறது. இந்தக் கோப்பு பெரும்பாலும் PDF அல்லது APK வடிவத்தில் இருக்கும். யாராவது ஒருவர் அதைப் பதிவிறக்கம் செய்தவுடன் அல்லது நிறுவியவுடன், சைபர் குற்றவாளிகள் அவர்களின் மொபைல் போனில் இருந்து முக்கியமான தகவல்களைத் திருட முயற்சிப்பார்கள்.
வங்கிக் கணக்கில் பணம் திருட்டு:
இந்த அதிகரித்து வரும் மோசடியைக் கருத்தில் கொண்டு, I4C (இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்) தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான X கணக்கு மூலம் அரசு ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. I4C இன் “சைபர் தோஸ்த்” பிரச்சாரத்தின் மூலம் வாட்ஸ் அப் வழியாக அனுப்பப்படும் APK கோப்புகள் மிகவும் ஆபத்தானவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது நிறுவப்பட்டதும் ஹேக்கர்கள் தொலைபேசியின் கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்கள் வங்கி விவரங்களை அணுகி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வாட்ஸ் அப் வழியாக APK கோப்புகளை அனுப்புவதன் மூலம் அரசாங்கம் ஒருபோதும் சம்பளம் அல்லது கமிஷன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாது என்பதை I4C தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, எந்த அறியப்படாத இணைப்புகள், கோப்புகள் அல்லது அழைப்புகளை நம்ப வேண்டாம். சரிபார்க்கப்படாத மூலங்களிலிருந்து APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். சம்பளம், ஓய்வூதியம் அல்லது கமிஷன் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://8cpc.gov.in என்ற வெப்சைட்டில் மட்டும் பார்க்கவும். சந்தேகத்திற்கிடமான செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது அழைப்புகளை உடனடியாகப் புறக்கணித்து, தேவைப்பட்டால் சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.
