தமிழகத்தின் முக்கிய பண்பாட்டு, புவியியல் பகுதிகளில் ஒன்றான கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதிகாரப் போட்டி, நிலவுரிமை போராட்டம், உழைப்புச் சுரண்டல் போன்ற சமூக நிஜங்களை சொல்ல வரும் படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்.
கொங்குப் பகுதியின் மண்ணையும் மக்களையும் இயல்பான ரூபத்தில் பதிவு செய்யும் இந்தப் படம் சிறு தெய்வ வழிபாடு, நம்பிக்கைகள், நிலத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறதாம்.
திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தை இயக்குநர் சுகவனம் இயக்கியுள்ளார்.
இதுவரை படத்தை பார்த்த எழுத்தாளர்கள் பலரும் “ஒரு கிராமத்தில் வாழும் உணர்வைத் தரும் படம்” என்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடித்துள்ளார்.
திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் சுகவனம் கூறுகையில், “நல்லபாடன் என்பது கொங்கு வட்டாரத்தில் நிலத்தில் உழைக்கும் பாட்டாளி மனிதனை குறிக்கும் சொல். நிலமற்ற உழைப்பாளர்களின் வாழ்க்கையை, அவர்கள் வழிபடும் சிறுதெய்வமான ‘ஒண்டிமுனி’ மீது கொண்ட நம்பிக்கையை, ஆதிக்கம் செலுத்துவோரின் சுரண்டலையும், நல்லபாடனின் போராட்டத்தையும் பதிவு செய்த படமே இது. இந்தப் படம் கிராம வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். மக்களுக்கான இந்தக் கலை, மக்களை நிச்சயம் சென்றடையும்” என்றார்.
திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில், சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ திரைப்படம் நவம்பர் 28 இல் திரைக்கு வருகிறது
- ராஜ திருமகன்
