கோவையில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் தகவல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gas

ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் நாடு முழுவதும் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு உடனடி தட்டுப்பாடு ஏதுமில்லை என்று மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஆட்சியரின் விளக்கம்

இந்தச் சூழலில், கோவையில் நிலவும் சிலிண்டர் இருப்பு குறித்து இன்று (மார்ச் 11) காலை செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கோவை மாவட்டத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கடந்த சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள சிலிண்டர் விநியோக ஏஜென்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.

தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் சமையல் சிலிண்டர்களுக்கு உடனடித் தட்டுப்பாடு (No Immediate Shortage) ஏதுமில்லை. போதுமான இருப்பு உள்ளது. விநியோகத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது தட்டுப்பாடுகள் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் வரும்பட்சத்தில், தட்டுப்பாட்டை நீக்கத் தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.”

ADVERTISEMENT

இந்த அறிவிப்பின் மூலம், கடந்த சில நாட்களாக நிலவி வந்த சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் கோவை மக்களிடையே தணிந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share