தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Seeman Passport
சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது காணாமல் போனது தெரிய வந்தது. பாஸ்போர்ட்டை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட் வழங்க கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆகையால் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சீமான் மனு மீது அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.