தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை பேசி வருவதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. தேமுதிகவிடம் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பேசி வருகிறது. எப்படியாவது தேமுதிகவை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு பாஜக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நாம் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துபவர்களிடன் தேமுதிக என்ன டிமாண்ட் வைக்கிறது. அக்கட்சியின் நிலவரம் என்னவென்று சொல்லியிருந்தோம்.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 10) தேமுதிக கூட்டணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லப்படியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அதிமுக பேச்சு வார்த்தை நடத்தாமல் பாஜக நடத்துகிறதே? என்ற கேள்விக்கு,
“பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். யார் அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தேஜ கூட்டணிக்குதானே வருவார்கள்” என பதிலளித்தார்.
மேலும் அவர், “சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்” என்று கூறினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 10) திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இவ்வாறு தெரிவித்தார்.
