பொதுவாழ்வில் தூய்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு இன்று (பிப்ரவரி 25) காலமானார்.
உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, “விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!
தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக அரசியலில் இருந்தாலும், தனக்கென சொத்துக்கள் சேர்த்துக் கொள்ளாமல் வாடகை வீட்டிலும், அரசு குடியிருப்பிலும் வசித்தவர். தமிழக அரசு இவருக்கு 2022-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கி கௌரவித்தது. அந்த விருதுத் தொகையான 10 லட்சம் ரூபாயையும் அவர் அரசுக்கே திருப்பி அளித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
