அமைச்சரவையில் பங்கு கேட்டு அதிமுகவிற்கு பாஜக அழுத்தம் கொடுக்க வில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (ஜனவரி 10) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார். அமைச்சரவையில் இடம் கேட்டு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. அமைச்சர்கள் யார் என்பது குறித்து தேர்தல் முடிவுகளே பதில் அளிக்கும் என்றும் தெரிவித்தார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும். எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
மேலும், தேமுதிகவுடன் இதுவரை எந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றார்.கூட்டணியில் இருந்து அனைவரும் விலகி வருகிறார்களா என்ற கேள்விக்கு, தற்போது அனைவரும் கூட்டணிக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ளார். இன்னும் நாள் இருக்கிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீ பரவட்டும்’ என்ற வசனத்தை நீக்குவது தொடர்பான சென்சார் முடிவு குறித்த கேள்விக்கு, “அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை” என்றார்.மேலும், பாஜக கொங்கு மண்டலத்தை மட்டும் குறிவைக்கவில்லை; தமிழகத்தையே இலக்காகக் கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
