மாணவர் ஜோயல் பிரகாஷ் தற்கொலை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அரசு உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் நேற்று (டிசம்பர் 8) தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
எழும்பூரில் உள்ள கவின் கலை கல்லூரியில் மாணவர் ஜோயல் பிரகாஷ் இறுதியாண்டு படித்துவந்தார். இவர் அக்டோபர் 24ஆம் தேதி இரவு தனது சொந்த ஊரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மாணவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு கல்லுரி மாணவர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் 7) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “பிரகாஷ் தன்னுடைய மரணத்துக்குத் துறைத்தலைவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் நேரில் வந்து, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாணவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர், துறை தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். பிரகாஷ் தற்கொலை தொடர்பாக ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அரசு உறுதியளித்தது. இதையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.�,