எடப்பாடிக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் அவர் அமித்ஷாவை சந்தித்துள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். Mutharasan on edappadi amitsha meeting
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இது தமிழக அரசியலில் விவாத பொருளாகியிருக்கிறது.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 26)பேசிய முத்தரசன், ”டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக கட்டிடத்தை பார்வையிட செல்வதாக திரும்ப திரும்ப கூறினர். ஆனால் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். ஏன் இவ்வளவு ஒளிவு மறைவாக உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும்? அவசியம் என்ன? பகிரங்கமாக சந்திக்கலாமே.
நேற்று கட்டிடத்தை பார்க்க வந்துள்ளேன் என்றார் எடப்பாடி பழனிசாமி. உள்துறை அமைச்சரை சந்திக்க போகிறேன் என்று சொல்லவேவில்லை. இன்று தேர்தலை பற்றி பேசவில்லை. தமிழ்நாடு பிரச்சினை, தொகுதி மறுவரையறை பற்றி பேசினோம் எனச் சொல்கிறார்.
நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கல்யாண தேதி என்று எந்த தேதியை தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவுதான். வேறொன்றும் வில்லை. இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதியே வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பாரக்ள்.
2 மணி நேரமாக இரவில் பேசியிருக்கிறார்கள். அரசியல் உறவே கிடையாது என சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, என்ன நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இப்போது போய் சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்கு உள்ளாகி பாஜகவின் முக்கிய தலைவரான அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். மெல்ல மெல்ல மற்ற செய்திகள் வெளிவரும்” என்று தெரிவித்தார். Mutharasan on edappadi amitsha meeting