ஆரம்பிக்கலாமா… லாலேட்டனின் அடுத்த பிளாக்பஸ்டர் படம் இதுதான்!

Published On:

| By uthay Padagalingam

mohanlan drishyam 3 ready to shoot

ஒரு வயதான முதியவர் ஏரிக்கரையோரம் ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு விலையுயர்ந்த தூண்டில் சகிதம் மீனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார். அவருக்கு அருகில் வேட்டியும் துண்டும் அணிந்த ஒரு சாதாரண நபர் குச்சியில் பெவிகாலை துளியளவு தடவி நீரில் முக்கியெடுத்து, நொடிப்பொழுதில் நான்கைந்து மீன்கள் அந்த குச்சியில் ஒட்டிய மகிழ்ச்சியுடன் ‘கிடைச்சாச்சு.. கிடைச்சாச்சு..’ என்று துள்ளியோடுவார். அந்த முதியவர் தனது தூண்டிலையும் அந்த நபரையும் மாறி மாறிப் பார்த்து விரக்தியடைவார். mohanlan drishyam 3 ready to shoot

கிட்டத்தட்ட அப்படியொரு நிலையைச் சக மலையாளத் திரைப்படங்களுக்கு ‘த்ருஷ்யம் 3’ தருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அப்படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பு.

எத்தனையோ படங்கள் வெறும் அறிவிப்பு நிலையிலேயே இருக்க, சட்டென்று படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது இப்படக்குழு.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் ‘த்ருஷ்யம் 3’யில் நடிக்கப் போவதாக, ஏற்கனவே மோகன்லால் அறிவித்திருந்தார்.

முதல் பாகம் திரையரங்குகளில் வசூலைக் குவித்தது. இரண்டாவது பாகமோ, கோவிட் – 19 காலகட்டத்தில் ஓடிடியில் வெளியாகி உலகமெங்கும் கவனிப்பைப் பெற்றது. அவற்றின் தொடர்ச்சியாக, மிகப்பெரிய வெற்றியைக் குறிவைத்து ‘த்ருஷ்யம் 3’ களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது மலையாளத் திரையுலகம். அதேநேரத்தில், ‘ஸ்கிரிப்ட் வொர்க் நிறைவு செய்து படப்பிடிப்புதளம் செல்ல இன்னும் சில மாதங்கள் ஆகலாம்’ என்றும் தகவல்கள் உலா வந்தன.

இந்தச் சூழலில், வரும் அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. ஆண்டனி பெரும்பாவூர், ஜீத்து ஜோசப் இருவருமே தமது சமூகவலைதளப் பக்கங்களில் இதனை அறிவித்திருக்கின்றனர்.

படப்பிடிப்பு தொடங்குவது குறித்தே ஒரு வீடியோ தயார் செய்யப்படுகிற இக்காலகட்டத்தில், வெறுமனே இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன் மூவரும் ஒன்றிணைந்து கைகுலுக்கி, கட்டியணைத்துக் கொள்கிற காட்சியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘லைட்ஸ்.. கேமிரா.. அக்டோபர்..’ என்று படப்பிடிப்பு தொடக்கத்தைத் தெரிவித்திருக்கிறது படக்குழு.

ஆதலால், இப்படத்தின் வெளியீடு நிச்சயம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.

’த்ருஷ்யம் 3’ சித்திரையில் விஷு கொண்டாட்டத்தை அதிகப்படுத்துமா அல்லது ஆவணியில் ஓணத்தை மையப்படுத்தி வெளியாகுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெளிவாகிவிடும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share