‘மோடி திட்டம்’: தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6,000

Published On:

| By Mathi

Modi Scheme Tami Nadu Farmer

பிரதமர் மோடியின் (Modi Scheme Tamil Nadu) விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் 22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ6,000 பயன்பெறுகின்றனர்.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் கூறியதாவது:பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், 19 தவணை தொகைகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 19-வது தவணைத் தொகையை 22 லட்சத்து 58 ஆயிரத்து 779 விவசாயிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 501 கோடியே 87 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் கூறினார்.

விவசாயிகளுக்கான மோடி திட்டம் என்பது என்ன?

ADVERTISEMENT

பிரதமர் விவசாயிகள் நலத்திட்டம் என்பது, சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பிப்ரவரி 2019 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000/- நிதிப் பலன், நேரடிப் பலன் பரிமாற்ற முறையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூன்று சம தவணைகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு, இந்தத் திட்டத்தின் பலன்கள், எந்த இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளது. பயனாளிகளைப் பதிவு செய்வதிலும் சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத் தன்மையைப் பேணி, மத்திய அரசு, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 19 தவணைகளில் ரூ.3.69 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

பிரதமர் விவசாயிகள் நலத்திட்டத்தின் பலன்கள், அதற்கான வலைதளத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் பயனாளிகளுக்கு மாற்றப்படுகின்றன.

விவசாயிகள் இதற்காக பதிவு செய்து கொள்வதை எளிதாக்கவும், திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவரவும், பொது நிதி மேலாண்மை அமைப்பு, ஆதார் மற்றும் வருமான வரித் துறையுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்ப தலையீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், மாநில/மத்திய அரசு ஊழியர்கள், அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள் போன்ற அதிக வருமானக் குழுவைச் சேர்ந்த தகுதியற்ற விவசாயிகளுக்கு மாற்றப்பட்ட எந்தவொரு தொகையையும் மீட்டெடுக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 416 கோடி நாடு முழுவதும் தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share