ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 12) குற்றம்சாட்டியுள்ளார். Mk Stalin criticized Amit Shah in government event
டெல்டா பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 12) மேட்டூர் அணையை திறந்து வைத்தார். பின்னர் புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,
“மாநில அரசின் நிதி!
சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர் அரசியல் மட்டும் பேசியிருந்தால் அவருக்கு அரசியல் கூட்டத்தில் நான் பதில் கொடுத்திருப்பேன். ஆனால், இந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
அதனால் கட்டாயத்தின் அடிப்படையில் நான் அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன். அமித்ஷாவின் பேச்சில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். ஒன்றிய பாஜக அரசு அளிக்கிற திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கு நன்மை கிடைக்காமல் செய்கிறது திமுக என்று பேசியிருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? குடிநீர் திட்டம், வீடு கட்டும் திட்டங்களில் ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்று மாநில அரசு தான் கூடுதல் பணத்தை கொடுக்கிறது.
பிரதமரின் பெயர் வைத்திருக்கும் திட்டங்களுக்கே, 50 சதவிகிதத்திற்கு மேல் மாநில அரசு தான் நிதி ஒதுக்கி செயல்படுத்துகிறோம். நீங்கள் எல்லோரும் படையப்பா படம் பார்த்திருப்பீர்கள். அதில் மாப்பிள்ளை இவரு தான்… ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னது என்று ஒரு டயலாக் வரும். அதுபோல தான் பிரதமர் மோடியின் பெயரில் உள்ள திட்டங்களுக்கும் நாம் நிதி வழங்கி வருகிறோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?
எந்த அடிப்படையில் மத்திய அரசு திட்டங்களை மடைமாற்றம் செய்கிறோம் என்று உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டுகிறார்? இன்னும் சொல்லப்போனால், ஒன்றிய பாஜக அரசு தான் தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தரவில்லை.
மிகச்சில திட்டங்களுக்கு ஒதுக்கும் பணம் கூட முழுமையாக வந்து சேரவில்லை. மதுரை வந்த அமித்ஷா, 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தாரா? அதே மதுரையில் திமுக அரசு கட்டிய கலைஞர் நூற்றாண்டு நூலகம், கீழடி அருங்காட்சியம் என ஏராளமான திட்டங்களை முடித்திருக்கிறோம். இதுதான் பாஜக மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.
10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன மருத்துமனையா? இல்லை விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? நிதி ஒதுக்கியிருந்தால் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாமே? இந்த லட்சணத்தில் குறை சொல்லி நீங்கள் பேசலாமா?
மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டிற்கென்று நீங்கள் செய்த ஒரே ஒரு சிறப்பு திட்டத்தை சொல்லுங்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒன்பது ஆண்டுகள் எங்களுடைய கட்சி அங்கம் வகித்தது. அந்த சாதனைகளை பட்டியல் போட்டு பல முறை நான் பேசியிருக்கிறேன்.
ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? ஆனால், அதை மட்டும் நீங்கள் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
தமிழர்களின் தொன்மையை அழிக்க முயற்சி!
2004 காலகட்டத்தையும் 2025 காலகட்டத்தையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறீர்கள். அன்று இருந்த பட்ஜெட் என்ன? இன்று இருக்கும் பட்ஜெட் என்ன? அன்றைக்கு தங்கம் ஒரு பவுன் 5000 ரூபாய், ஆனால், இன்றைக்கு 71,000 ரூபாய்.
மதுரை வந்த அமித்ஷா இப்படி பேசினால், மதுரையின் தொன்மையை நிராகரிக்கூடிய வகையில் பேசியிருக்கிறார் மற்றொரு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத். கீழடியில் அறிவியல் ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வு அறிக்கையை திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். இரும்பின் தொன்மையை உலக அளவிலான ஆய்வகங்களில் சோதனைக்கு உட்படுத்தி நாம் வெளியிட்டோம்.
அப்போதும் இவர்கள் பாராட்டவில்லை. பாரட்டக்கூட வேண்டாம், அந்த முடிவுகளை அங்கீகரித்து ஒரு வார்த்தையாவது பேசினார்களா?
தமிழர்களின் தொன்மையை அழிக்கவும் மறைக்கவும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு இதையெல்லாம் எதிர்த்து கேட்க துணிச்சல் இல்லை. அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக கூட்டணி வைத்துகொண்டு அவர்களுக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படி தமிழுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் எதிரான சிந்தனைகளை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் தான், தமிழக மக்களும் அவர்கள் கூட்டணியை புறக்கணிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.