அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்… மணமக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!

Published On:

| By Selvam

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்வதால், மணமக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார். mk stalin advises couples to have children

இந்த விழாவில் ஸ்டாலின் பேசும்போது,

“இது சீர்திருத்த திருமணமாக நடைபெற்றுள்ளது. 1967-க்கு முன்பாக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெறவில்லை. ஆனால், அண்ணா முதல்வராக பதவியேற்ற பின்பு 1967-ஆம் ஆண்டு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இந்த விழாவில் தமிழில் பேசியதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு வரும்போது உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பு தமிழில் வெளியாகிறது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம். அதேவேளையில், உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர நீங்கள் எங்களோடு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மணமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். அதேபோல, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வது நல்லது.

ஏனென்றால் மக்கள் தொகை அடிபடையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடை சரியாக பின்பற்றியதால் தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நாடாளுமன்ற எண்ணிக்கை குறையும் சூழ்நிலை வந்திருக்கிறது. அதனால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். mk stalin advises couples to have children

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share