வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். minister mrk panneerselvam discuss with american
இந்தநிலையில், அமெரிக்கா விஸ்கான்சின் பல்கலைக்கழக செயலாளர் ரெண்டி ரொமன்ஸ்க்கி, வேளாண்துறை பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜூன் 23-ஆம் தேதி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“அமெரிக்காவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் திடீரென பரவும் பூச்சிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், முன்னறிவிப்பு செய்வது பற்றிய நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு விவசாயிகளின்
நிறுவனத்தின் மூலம் உலக அரங்கில், தமிழக விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
விஸ்கான்சின் மாகாணத்தில் அதிகளவில் உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வேளாண் பண்ணைக்கு சென்று, அங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு, கேரட், புதினா ஆகிய பயிர்களின் சாகுபடி தொழில்நுட்ப முறைகள், நவீன இயந்திரங்களின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், நீர் மேலாண்மை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை பற்றி விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், விஸ்கான்சின் மாகாணத்தில் அதிக மகசூல் தரக்கூடிய கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்து தமிழக விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதன் மூலம் வருமானத்தை பெருக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவாக விவாதித்தார்.
பின்னர், ஜூன் 24 அன்று அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கான்செஸ் மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் கான்சாஸ் மாகாண வேளாண்துறை செயலாளர், மாகாணத்தின் ஏற்றுமதி இயக்குநர், பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் இங்கு கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடினார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.