பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார். Minister Govi Chezhiaan announced Engineering counselling
2025 – 2026 கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியலை அமைச்சர் கோ.வி.செழியன் சென்னையில் இன்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோ.வி.செழியன்,
“பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,50,298. இந்த ஆண்டு 2,41,643 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற 51,004 மாணவர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இதில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு பிரிவில் 5,885 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 2,446 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்கள் பிரிவின் கீழ் 1,361 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 473 மாணவர்களும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
200-க்கு 200 கட் ஆஃப் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 145. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 140. மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 5.
மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 5 நாட்களுக்குள் (02.07.2025-க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC’s) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 02.07.2025-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 07.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 14.07.2025 முதல் 19.08.2025 வரை நடைபெறும். துணை கலந்தாய்வு 21.08.2025 முதல் 23.08.2025 வரை நடைபெறும்” என்று கோவி.செழியன் தெரிவித்தார். Minister Govi Chezhiaan announced Engineering counselling