பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று மார்ச் 24-ந் தேதி ஆலோசனை நடத்தினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் குறித்து மோடியுடன் டிரம்ப் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். எரிசக்தி போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், இந்த முக்கிய நீர்வழியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்து மோடியும், டிரம்பும் வலியுறுத்தினர்.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி டிரம்பிடம் தெரிவித்தார். பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படவும், அவ்வப்போது தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டன.
