மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்தில் எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ பாடல் பாடப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, “னது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை நமதே’ என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!” என கூறியுள்ளார்.
மலேசியாவில் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2015-ம் ஆண்டிலிருந்து மலேசியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
கோலாலம்பூரில் பிரதமர் மோடியை, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மலேசிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் பின் அவாங் சௌனி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் பகிரப்பட்ட பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வண்ணமயமான கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணம், 2024-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை மற்றும் மகாசாகர் தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய தூணான இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
