திமுக- காங்கிரஸ் கூட்டணியின் நல்லிணக்கத்தை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் சீர்குலைத்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா சாடியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் நேற்று கோபண்ணா பேசியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 60 பேரை அழைத்து தனித்தனியாக தலைவர் கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எல்லோரும் உட்கார்ந்து கருத்து கேட்டார்கள். எல்லாரும் கருத்து சொன்னார்கள்.
அதில் சொல்லப்பட்ட பெரும்பாலானவர் கருத்துக்கள் ஒரே மாதிரியாக, அதிக இடங்களை கேட்கணும், ஆட்சியில பங்கு கேட்கணும், திமுகவுடன் தான் கூட்டணி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தல் வருது, சட்டமன்றத் தேர்தலில் யார் போட்டியிட விரும்புகிறார்களோ, அவர்கள் அத்தனை நண்பர்களும் திமுக கூட்டணி தான் விரும்புகிறார்கள். ஏன்னா திமுக கூட்டணி தான் ஒரு வெற்றிக் கூட்டணி என்றனர்.
அந்த கூட்டத்துக்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தான் பேசினார். பக்கத்துல கார்கே இருந்தார், இந்தப்பக்கம் ராகுல் காந்தி இருந்தார். இனிமேல் இந்த கூட்டணியைப் பற்றி யாரும் ஊடகங்களிலோ, பொது வெளியிலோ பேசக்கூடாது. பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.
ஆனால் அப்படி பேசியதற்கும் பிறகு, தொடர்ந்து குறிப்பாக நண்பர் மாணிக்கம் தாகூர், மதுரையில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானமெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். இந்த மாதிரி நிகழ்வுகள் நிச்சயமாக கூட்டணியில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் கவலையோடு இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரும் காங்கிரஸ் ,மேலிடத்துக்கு இந்தக் கூட்டத்தைப் பற்றி சொல்லி இருப்பார்.
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘You will never, never, ever in your entire life rule over people of Tamil Nadu’ என்றார். அந்த பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து ”Rousing speech in Lok Sabha” என்றார். ராகுல் காந்திக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஒரு நல்ல புரிதல்- கொள்கை அடிப்படையில் இருக்கிறது.
பிரவீன் சக்கரவர்த்திக்கும் தமிழ்நாடு காங்கிரசுக்கும் என்ன இருக்கு? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருத்தைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி அல்லது பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இவர்கள்தான் கருத்துச் சொல்ல முடியும். இவருடைய கருத்தில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
யார் என்ன பேசினாலும், என்ன சலசலப்பு ஏற்பட்டாலும் அறிவாலயத்தில் ஐவர் குழு சென்று பேசி இந்தக் கூட்டணி நிச்சயமாக முடிவு செய்யப்படும். ஏன்னா இந்தக் கூட்டணி தமிழ்நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் இதில் அடங்கி இருக்கிறது. இவ்வாறு கோபண்ணா கூறினார்.
