மதுரை மாநகராட்சி உறுப்பினர்களை கலைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் நடந்த பெரிய அளவிலான சொத்து வரி முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார்
இதையடுத்து கடந்த அக்டோபர் 15, 2025 அன்று தனது ராஜினாமா கடிதத்தை இந்திராணி பொன்வசந்த் சமர்ப்பித்த நிலையில், அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற்ற மதுரை மாநகராட்சி மன்ற சிறப்புக் கூட்டத்தில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த டி ஆர் தேசிக்காச்சாரி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் மாநகராட்சி மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டங்களும் நடத்தப்படாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாநகராட்சியில் மேயர் என்று யாரும் இல்லை எனில், மாதம்தோறும் துணை மேயர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும்.
துணை மேயரும் இல்லை என்றால் பொதுவாக ஒரு உறுப்பினரை தலைவராக வைத்து கூட்டம் நடத்தலாம்.
இதுபோன்று தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு கூட்டங்கள் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
எனவே கூட்டம் நடத்தப்படவில்லை என்றால் உறுப்பினர்களை கலைக்க உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.
மேலும் மேயர் பதவி விலகிய பின்னர் சாதாரண கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
