தெஹ்ரானின் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தனது முதல் ஈரானிய திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சரக்கை வாங்கியுள்ளதாக LSG வர்த்தகத் தரவுகள் மற்றும் மூன்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியத் தடைகளின் அழுத்தத்தால் இந்தியா 2019ஆம் ஆண்டில் ஈரானிடமிருந்து எரிசக்தி வாங்குவதை நிறுத்தியிருந்தது.
LSEG தரவுகளின்படி, அந்த டேங்கர் கப்பல் ஆரம்பத்தில் சீனாவிற்கு அனுப்பப்படவிருந்தது. தடைகளால் பாதிக்கப்பட்ட, ஈரானிய LPG ஏற்றப்பட்ட ‘அரோரா’ என்ற டேங்கர் கப்பல் மேற்குக் கடற்கரையில் உள்ள மங்களூர் துறைமுகத்திற்கு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிசக்தி போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறு, அந்த தெற்காசிய நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய எல்பிஜியின் இந்த சரக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த சரக்கு ஒரு வர்த்தகரிடமிருந்து வாங்கப்பட்டதாகவும், அதற்கான பணம் ரூபாயில் செலுத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஈரானிடமிருந்து கூடுதல் எல்பிஜி சரக்குகளை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், ஈரானிடமிருந்து எந்த எல்பிஜி சரக்குகளும் வாங்கப்பட்டதாகத் தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று ஓர் அதிகாரி கூறியுள்ளார். “(ஈரானிலிருந்து – Iran) எந்த சரக்கும் வரவில்லை; அதுபோன்ற எதையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை,” என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி இறக்குமதியாளரான இந்தியா, பல தசாப்தங்களில் இல்லாத மிக மோசமான எரிவாயு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 33.15 மில்லியன் மெட்ரிக் டன் எல்பிஜி பயன்படுத்தியது. இதில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
இந்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள தனது எல்பிஜி சரக்குகளை இந்தியா படிப்படியாக மீட்டு வருகிறது. இதுவரையில் ஷிவாலிக், நந்தா தேவி, பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய நான்கு எல்பிஜி டேங்கர்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள தனது காலி கப்பல்களில் இந்தியா எல்பிஜியை நிரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
