எடப்பாடியை சந்தித்த லாட்டரி மார்டின் மனைவி.. ஐஜேகேவில் இருந்து விலகல்.. காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

ஐஜேகே கட்சியில் இருந்து விலகிய லாட்டரி மார்டின் மனைவி லீமா ரோஸ் அடுத்த 2 வாரங்களில் பெரிய கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபர் லாட்டரி மார்டின் மனைவி லீமா ரோஸ். இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த லீமா ரோஸ் ஜனவரி 9ம் தேதி திடீரென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தான் பிறந்த திருவாடனை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் வேறு கட்சியில் இணையப்போவது இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐஜேகே கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ADVERTISEMENT

அந்த அறிக்கையில், “2012 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். 2012ல் துணைப் பொதுச் செயலாளராகவும், 2019 ஆம் ஆண்டு முதல் இணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறேன். இவ்வாறு முக்கிய பதவிகள் வகித்தபோதிலும் மேம்போக்காக அல்லாமல் களத்தில் இறங்கி கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு இருக்கிறேன். நம் சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளேன். சமூகத்தில் நடக்கும் வன்மையான பல்வேறு அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக எனது முழு உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்துள்ளேன்.

எனது மேற்பார்வையில் இந்திய ஜனநாயக கட்சியை கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்தி இருக்கிறேன். கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒன்றிய அளவிலும், கிளை அளவிலும் பலநூறு நிர்வாகிகளை நியமித்து கட்சியை வளர்த்திருக்கிறேன். அதேபோன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஒன்றிய அளவிலும் கிளை அளவிலும் பலநூறு நிர்வாகிகளை நியமித்தது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் எனது தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துள்ளேன்.

ADVERTISEMENT

நான் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். மேலும் மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தாளாளராக பொறுப்பு வகிக்கும் நான் ஆண்டு தோறும் பல நூறு மருத்துவர்கள் உருவாக காரணமாக இருந்து வருகிறேன். இப்படி பல அலுவல் பணி மத்தியில் ஐஜேகே சொந்தங்களின் இல்ல நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வகையில் தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லாத அளவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்திருக்கிறேன்.
இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஐஜேகே வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அந்த வகையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஒரே நாளில் 67 கிராமங்களுக்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டது எனது தனிப்பட்ட சாதனையாக நான் கருதுகிறேன்.

இவ்வாறு நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், பொதுவாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன். இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் வழங்காதது பெரும் ஏமாற்றமே. உழைப்புக்கேற்ற அங்கீகாரத்தை கட்சியின் தொண்டர்களான, நமது சமூக சொந்தங்களை விட்டு பிரிய மனமில்லாமல் என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி 8 மாத காலம் காத்திருந்தேன்.

ADVERTISEMENT

கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதில் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் பெரிய கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் எடப்பாடியை சந்தித்த லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்து செயல்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share