பெருந்தலைவர் காமராஜர் குறித்த வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை என்ன?
பெருந்தலைவர் காமராஜர் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பற்றி திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இது காமராஜரை சிறுமைப்படுத்தும் பேச்சு என்று காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
2013-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், கலைஞர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியதையே திருச்சி சிவா அப்படியே பேசியதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த பின்னணியில் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.