விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி… கமிஷனர் அருண் வார்னிங்!

Published On:

| By Selvam

laser incident on dubai chennai flight

சென்னையில் விமானம் மீது இரண்டாவது முறையாக லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. laser incident on dubai chennai flight

கடந்த மே 27-ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த விமானம் மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக, மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்தசூழலில், மே 5-ஆம் தேதி இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் 304 பயணிகளுடன் சென்னை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கும் போது சக்திவாய்ந்த பச்சை லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய போக்குவரத்து ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில், லேசர் ஒளி அணைக்கப்பட்டதால் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இந்தநிலையில், சென்னை விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள வானூர்தி வழித்தடங்களில் லேசர் விளக்குகள் ஒளிர்தல் மற்றும் உயர பறக்கும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையாளர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“BNSS சட்டம் பிரிவு 163 மற்றும் 14 (2) ஆகியவற்றின்படி பாதுகாப்பு கருதி சென்னை பெருநகர காவல் சரகத்தில், சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் விளக்குகள் ஒளிரவும், அதிக ஒளி தரும் விளக்குகள் ஒளிரவும், சூடான காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன்கள் மற்றும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கும் (Prohibiting flash Laser Beam Lights, release of hot air balloons/ Tethered balloon & light emitting objects, Fly gliders and other flying Objects around the airspace near Chennai Airport) 28.05.2025 முதல் 26.07.2025 வரை தடை செய்யப்பட்டு அமலில் உள்ளது.

சென்னை விமான நிலைய பகுதிகளிலும் அருகாமையில் உள்ள பிற பகுதிகளிலும் பயணிக்கும் விமானங்கள் மீது லேசர் விளக்குகள் ஒளிர செய்து, அதனால் விமான வழித்தடங்களில் லேசர் விளக்கு குறியீட்டால் தொழில்நுட்ப கவன குறைவு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி சென்னை பெருநகர காவல் துறை லேசர் ஒளி விளக்குகள் உள்ளிட்ட பறக்கும் பொருட்கள் பயன்படுத்திட தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த பயணிகள் விமானத்தின் மீது யாரோ லேசர் விளக்கினை ஒளிர செய்ததால், விமான நிலைய கட்டுப்பாட்டறை மூலம் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கண்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி யாரும் பயன்படுத்திட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆகவே, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள தடைகளை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்படுகிறது. laser incident on dubai chennai flight

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share