அதிமுக எம்.பி தம்பிரைக்கு சொந்தமான பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொதுநலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.
அதில், “ஆவடி அருகே கோனம்பேடு கிராமத்தில் உள்ள தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், அருகிலுள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து மாணவ விடுதிகள், மின்சாரத் துணை நிலையம் மற்றும் தனியார் பாதைகளை அமைத்துள்ளது. அந்த நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சர்வே அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
