கொடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காதது ஏன் என்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தின் புதிய நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
2017ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை சயான், வாளையார் மனோஜ் உள்பட ஏராளமானோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி முரளிதரன் வழக்கை விசாரித்தார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை ஏன் இன்னும் முடிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு சார்பில், வழக்கு தொடர்பான செல்போன் உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கேட்கப்பட்டது. அந்த அறிக்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்
