ஏடிஜிபியை கைது செய்ய உத்தரவு… பூவை ஜெகன்மூர்த்தியை கேள்வியால் துளைத்தெடுத்த நீதிபதி! நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

Kidnapping case Order to arrest ADGP

கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமையும் கைது செய்யவும் உத்தரவிட்டார். Kidnapping case Order to arrest ADGP

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயா ஸ்ரீ ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு விஜயா வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் தனுஷின் சகோதரர் இந்திரசந்த்தை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கேட்டு பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தை நாடினார்.

இந்த மனு இன்று (ஜூன் 16) காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், “கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும், அவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் ஆர்வமாக உள்ளனர்” என்று வாதிட்டார்.

மறுபுறம், கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி,  ”சிறுவனின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அவரது மூத்த மகன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்” என்று தெரிவித்தார். 

“எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் லட்சுமியின் 22 வயது மூத்த மகனைக் கடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த  இளைய மகனை கடத்தியுள்ளனர்.  இரண்டு கார்களில் வந்து கடத்தி சென்றுள்ளனர். 

போலீசார் சிறுவனை தேட ஆரம்பித்தனர்.  அப்போதுதான் ஏடிஜிபி கார், அந்த இளைஞரை ஒரு பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டுச் சென்றதும், அதை ஒரு கான்ஸ்டபிள் ஓட்டியதும்  தெரியவந்துள்ளது.  ஏடிஜிபி பயன்படுத்திய அதே அதிகாரப்பூர்வ காரில் , பெண்ணின் தந்தை வனராஜாவும் முன்னாள் கான்ஸ்டபிள் மகேஸ்வரியும் பயணம் செய்துள்ளனர்

போலீசார் இதுவரை மகேஸ்வரி, வனராஜா,  புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். 

இதில் கட்சி வழக்கறிஞரும், மகேஸ்வரியும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.  அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து 7.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை காவலில் வைத்து விசாரித்தால் தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும்” என்று வாதிட்டார். 

அப்போது ஏடிஜிபி இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை என்று  நீதிபதி கேள்வி எழுப்பிய போது கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன்,  “திருவள்ளூர் போலீசார் முதலில் எம்.எல்.ஏ.வை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்னர் ஏடிஜிபி மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர். ஆனால் எம்.எல்.ஏ சுமார் 2,000 ஆதரவாளர்களைக் கூட்டி, போலீசார் அவரை கைது செய்யவிடாமல் தடுத்துவிட்டார்” என்று பதிலளித்தார். 

இதை கேட்ட நீதிபதி வேல்முருகன், அரசியல்வாதிகளின் வீட்டிற்கு முன் கூடி, சட்டப்பூர்வமான கடமையைச் செய்வதைத் தடுக்கும் இதுபோன்ற ஆதரவாளர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக  வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே, காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் அரசியல் பிரமுகர்களின் நடைமுறை நிறுத்தப்படும் என்று கருத்து தெரிவித்தார். 

மேலும், இன்று மதியம் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தி கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதன்பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து மதியம் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில் ஏடிஜிபி ஜெயராம் ஆஜரானார்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன், எம்.எல்.ஏ.வும் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தகவல் தெரிவித்தார். இதனால் பூவை ஜெகன் மூர்த்தி வரும் வரை விசாரணையை சற்று நேரம் ஒத்திவைத்தார் நீதிபதி.

இதையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி வேல்முருகன், எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெகன் மூர்த்தி, கே வி குப்பம் தொகுதியில் இருந்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன் என்று பதிலளித்தார்.

இதை கேட்ட நீதிபதி, “இந்த மக்கள் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் நீங்கள் பேச தான் வாக்களித்தனர். ஆனால் அதை மறந்து கட்ட பஞ்சாயத்து நடத்தியுள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?.

இரண்டு பேர் திருமணம் செய்து கொள்வது உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதி. ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள்தான் எம்.எல்.ஏ., நீங்களே போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால். சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் என ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார்.

“எம்.எல்.ஏ. பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்து செய்ய கூடாது. கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி, “ஆட்களை திரட்டி போலீசாரை தடுக்கும் வகையில் செயல்பட்டால் வேறு மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து, “உங்களை கைது செய்ய உத்தரவிட வில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது.

உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். வாக்களித்த மக்களை ஏமாற்ற கூடாது. விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும். யாரும் உடன் வரக் கூடாது என்றும் உத்தரவிட்டு, முன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதேசமயம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

இதற்கு ஏடிஜிபி ஜெயராம் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வேல்முருகன், “எம்.எல்.ஏ.வையும், ஏடிஜிபியையும் சமமாக கருத முடியாது. வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க எம்.எல்.ஏ. வுக்கு உத்தரவிட்டுள்ளேன். அரசு ஊழியருக்கு இந்த சலுகை வழங்க முடியாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு, இது ஒரு செய்தியை சொல்லட்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். Kidnapping case Order to arrest ADGP

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share