இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் படவுலகைச் சேர்ந்த அனைவரும் தேடுகிற ஒரு ஹீரோயினாக இருப்பவர் கயாடு லோஹர். ‘ஒரே படத்துல ஓஹோன்னு புகழ்’ என்று சொல்கிற வகையில், அவரது வாழ்வில் இந்த மாற்றத்தை ‘ட்ராகன்’ ஏற்படுத்தியிருக்கிறது. அது கேரளா, தெலங்கானா, ஆந்திராவிலும் பலரைப் பரவசப்படுத்திய காரணத்தால், ‘பான் இந்தியா’ படம் என்றில்லாமல் ஓடிடி வெளியீட்டையும் மனதில் வைத்தே கயாடு லோஹரின் பின்னால் செல்கின்றனர் தயாரிப்பாளர்கள். kayadu lohar join hands with tovino thomas
இதுவரை மலையாளத்தில் துண்டு துக்கடா பாத்திரங்களில் நடித்து வந்த கயாடு லோஹர், இப்போது முன்னணி நாயகனான டொவினோ தாமஸ் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘பள்ளிசட்டம்பி’ படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தின் கதை 1957-58ஆம் ஆண்டுகளில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். விவசாயப் பணிகளுக்காகக் கேரள நிலப்பகுதிகளில் குடியேறிய தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனைகளைப் பேசுவதாக இப்படம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ் பாபுவின் எழுத்தாக்கத்தில், ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பில் உருவாகிற இந்தப் படத்தில் விஜயராகவன், சுதீர் கரமனா, ஜானி ஆண்டனி, டி.ஜி.ரவி, ஸ்ரீஜித் ரவி, பிரசாந்த் அலெக்சாண்டர் உடன் தெலுங்கு நடிகர் சிவகுமாரும் இதில் இடம்பெறுகிறாராம்.
இப்படத்தை இயக்குகிற டிஜோ ஜோஸ் ஆண்டனி ஏற்கனவே குயின், ஜன கண மண, மலையாளி ஃபரம் இண்டியா படங்களைத் தந்தவர். அவற்றில் அரசியல் நெடி ரொம்பவே அதிகம்.
சிபிஐ கட்சி கேரளாவில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த காலத்தில் நிகழ்கிற கதையாக ‘பள்ளிசட்டம்பி’ அமைந்திருப்பதால், இதிலும் அரசியல் காரம் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு கதையில் கயாடு லோஹரின் பங்கு என்னவாக இருக்கப் போகிறதோ என்பது இனி அவரது ரசிகர்களின் கவலையாக இருக்கும்..!