கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ( Karur TVK VIjay) கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் இன்று 4 பேர் ஆஜராகினர்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தையே உலுக்கியது.
குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வந்த இந்த வழக்கை, அரசியல் தலையீடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் காவல்துறையின் சில அறிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்தது. பொதுமக்கள் மத்தியில் விசாரணையின் மீது நம்பிக்கை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த முக்கிய முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்தது.
இதனையடுத்து, சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, அக்டோபர் 18 முதல் தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சிபிஐயின் கூடுதல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தார். அதன்படி, இன்று சிபிஐ அலுவலகத்தில், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் அப்பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்திவரும் உரிமையாளர் என மொத்தம் நான்கு பேர் ஆஜராகி, தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். இது விசாரணையில் ஒரு முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மாதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு சிபிஐ விசாரணையைக் கண்காணித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்.
மேலும், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இரண்டு வெவ்வேறு அமர்வுகள் ஒரே நேரத்தில் வழக்கை விசாரித்ததையும், ஒரு டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும்போது ஒற்றை நீதிபதி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. இதற்கிடையில், தமிழக அரசு, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் வரை இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது.. இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
