கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட எஸ் பி, ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த பெருந்துயரம் தொடர்பாக அக்கட்சி தலைமை சார்பில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையோ பதிலோ சொல்லப்படாமல் இருக்கிறது.
இதனால் கட்சித் தலைவர் விஜய் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அதேசமயம் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த சூழலில் கரூர் கூட்ட நெரிசலை தடுக்க தவறியதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்கட்சி சார்பில் வழக்கறிஞர் கார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக பிரச்சாரத்தின் போது மாவட்ட ஆட்சியர் எஸ் பி ஆகியோர் தங்களது கடமையை செய்ய தவறிவிட்டனர். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் தான் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இவர்கள் மீது துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால் இவரது மனுவில் தமிழக வெற்றிக் கழகம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு வெற்றி கழகத்தின் உறுப்பினர் என்று இடம்பெற்றுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.