ஈரான்-இஸ்ரேல் போரின் எதிரொலியாக இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் இந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.
இதேபோன்ற ஒரு சூழல் கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின் போதும் காணப்பட்டது; அப்போது மத்திய பாஜக அரசு தாமதமாகவும் போதிய அளவில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சாதாரண மக்களை அந்த நெருக்கடியின் சுமையை சுமக்க வைத்தது.
தற்போதைய சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தையும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இத்தகைய இடையூறுகளைத் தடுக்கத் தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
