சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 29-ந் தேதி தமது எக்ஸ் பக்கத்தில், “கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என்று சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இந்தி திணிக்கப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் பக்கத்தில், “சிவகாசி ரயில் நிலையப் பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்குத் தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழே முன்னவள் ! மூத்தவள்! முதன்மையானவள்!” என தெரிவித்துள்ளார்.
