கன்னட மொழி சர்ச்சை தொடர்பான வழக்கில் நடிகர் கமலை கடுமையாக கர்நாடக உயர்நீதிமன்றம் சாடிய நிலையில், தனது பேச்சு குறித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம் எழுதியுள்ளார்.
‘தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்’ என நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானதை அடுத்து அவருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. kamal write letter to KFCC after court condemned
தொடர்ந்து அவரது நடிப்பில் நாளை மறுநாள் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தக் லைஃப் பட வெளியீட்டைத் தடை செய்வதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தது.
இதனையடுத்து எந்தவித இடையூறுமின்றி தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கோரியும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரியும் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி எம். நாகபிரசன்னா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கமலை கடுமையாக சாடிய நீதிபதி, “கர்நாடக மக்கள் மன்னிப்பு தானே கேட்டார்கள்? ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி கர்நாடக மக்களின் உணர்வுகளை நீங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டால் எல்லாம் தீர்ந்திருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் மன்னிப்பு கேட்பது குறித்து கமலுக்கு ஆலோசனை வழங்குமாறு அவரது வழக்கறிஞக்கு உத்தரவிட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அதற்கு அடுத்த சில நிமிடங்களில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்து நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

கன்னட மொழி மீது விவாதம் இல்லை!
அதில், “30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். கர்நாடக மக்கள் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையின் காரணமாக, நான் நேர்மையுடன் பின்வருவனவற்றை விவரிக்கிறேன்.
புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் மட்டுமே எனது வார்த்தைகள் வெளிப்படுத்தின. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ அல்லது விவாதமோ இல்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எனது வாழ்க்கை முழுவதும், கன்னடம் பேசும் சமூகம் எனக்கு அளித்த அரவணைப்பையும் பாசத்தையும் நான் போற்றி வருகிறேன், இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்.
மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன்!
மொழி மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த நிலத்தின் அனைத்து மொழிகளுடனும் எனது பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளின் சமமான கண்ணியத்திற்காக நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன். மேலும் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை சீர்குலைக்கிறது.
சினிமாவின் மொழியை நான் அறிவேன், பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் அறிக்கை நம் அனைவருக்கும் இடையே அந்த பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டுமே.
தவறான புரிதல் தற்காலிகமானது!
என் மூத்தவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த அன்பும் பிணைப்பும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த அன்பும் பிணைப்பிலிருந்துதான் சிவன்னா ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார். இதன் காரணமாக சிவன்னா இவ்வளவு அவமானத்தை சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் நம் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும், மேலும் உறுதியாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் பகைமைக்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பவில்லை.
எனது வார்த்தைகள் அவை நோக்கம் கொண்ட உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் உண்மையிலேயே நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.