2026 -27க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்த நிலையில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும் முக்கிய அறிவிப்புகள் எதுவும் பெரிதாக இடம்பெற வில்லை என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் கவிதை வழியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.
‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம். பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி… பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!’
நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.
‘கள்ளிச் செடி பசுவாகிப் பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள் வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்
எங்கும் ஓங்கும்’
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது.
