தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்துவது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 8) கண்டனம் தெரிவித்துள்ளது.
‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வீட்டு வசதி வாரியத்தால் வீடு வாங்கியவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு பெற இயலாது என்று அரசு ஒரு திருத்த அரசாணையைப் பிறப்பித்தது.
இதன் காரணமாக ஏற்கனவே பல எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது, எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இது தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். மேலும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதிப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்” என நீதிபதி எச்சரித்தார்.
அப்போது அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார்.