சென்னை மெரினா கடற்கரையை வணிக மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது. மெரினாவில் கடைகளை ஆக்கிரமிப்பதன் பின்னணியில் மாஃபியா கும்பல் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி முதலில் 1,417 கடைகளை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இதற்கிடையே, கடற்கரையின் பொலிவை மீட்டெடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் கடைகளின் ஒதுக்கீடு தொடர்பான திட்ட வரைபடத்தைத் தாக்கல் செய்தனர். அதை ஆய்வு செய்த நீதிபதிகள், மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் என தலா 100 வீதம் மொத்தம் 300 கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கினர்.
இதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்ய ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமாரை நியமித்து உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து 300 பேருக்கு மெரினாவில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எஸ். தேவி மெரினாவில் கடை ஒதுக்கீடு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு நேற்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, கடற்கரையில் வியாபாரம் செய்வது ஒருவரின் அடிப்படை உரிமையோ அல்லது சட்டப்பூர்வ உரிமையோ அல்ல என்று தெரிவித்தனர். மேலும், மெரினாவை ஒரு வணிக மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தினர்.
மெரினாவில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 600-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் தலையிடும் முன் மெரினா கடற்கரை முழுவதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுத்தமின்றி இருந்தது. அந்தக் கடைகள் மாஃபியா கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கடை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்தக் கும்பல், நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு பின்னணியில் இருந்துகொண்டு சிலரைத் தூண்டிவிடுவதாகவும், அதனால்தான் தற்போது இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
மெரினாவை வியாபாரத் தளமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கேரளாவின் கோவளம், ஒடிசாவின் பூரி, மகாராஷ்டிராவின் மரைன் டிரைவ் போன்ற கடற்கரைகளைப் போல மெரினாவையும் அழகுபடுத்தி சுத்தமாகப் பராமரித்தால் மட்டுமே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள். முறையற்ற ஆக்கிரமிப்புகளும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புகளும் வருங்கால சந்ததியினருக்கு மெரினாவைப் பாதுகாப்பதில் பெரும் தடையாக அமையும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்குப் பிறகும், நீதிமன்றத்தின் நேரடி கள ஆய்வுக்குப் பிறகும், மெரினாவில் உணவு, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்ய 300 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாகக் கடைகளை ஒதுக்க அனுமதி தர முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பான மற்ற மனுக்கள் மீதான உத்தரவைப் பின்னர் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
