சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பைக் ரேஸ் மற்றும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதாக நாலு இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், இசிஆர், ஓஎம்ஆர், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து மிகுந்த சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களின் விபரங்களை காவல்துறை தனியாக பராமரித்து வருகிறது. இனி பைக் ரேஸில் ஈடுபட மாட்டோம் என்று 107 பேர் உறுதிமொழி அளித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2022 ஆம் ஆண்டு 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளதாகவும், 4.43 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
எனவே போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளை கையாள்வதற்கு காவல்துறை தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் அவர், தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் பணிகளில் தான் கவனம் செலுத்துவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான காவல்துறை பணிகளை மேற்கொள்வதை தவிர்க்கக்கூடாது. எந்த ஒரு தாமதத்திற்கும் தேர்தலை காரணமாக கூறக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்
