ஒருகாலத்தில் பின்னணி பாடகர்கள், பாடகிகளின் பணி என்பது ரிக்கார்டிங் ஸ்டூடியோவுடன் முடிந்துவிடும். Jonita Gandhi worries boys
இசையமைப்பாளர்கள் அழைக்கிற நேரத்தில் வந்து, பாடலாசிரியர்களிடம் பாடலைப் பெற்று, குறிப்பிட்ட நேரத்தில் பாடல் பதிவு செய்யப்படும் வரை தங்களது பங்களிப்பைச் சிறப்பாகக் கொடுப்பதே அவர்களது வேலையாக இருந்தது. ‘மல்டி ட்ராக்’ பதிவு முறை வந்தபிறகு, எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தவாறும் பாடலாம் என்கிற நிலை வந்துவிட்டது.
அதே நேரத்தில், ‘லிரிக் வீடியோ’ அல்லது ‘சாங் மேக்கிங்’கை காட்டுகிற பதிவுகளுக்காகப் படம்பிடிக்கிறபோது முகத்தைக் காட்டுகிற கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர். போலவே, இசை மேடைகளில் ரசிகர்களைக் கவரும் விதமாகத் தோன்றுகிற, ஆடுகிற அளவுக்கு வசீகரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
சமகாலத்தில் அவற்றை மிக நேர்த்தியாகக் கையாள்கிற பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் ஜோனிடா காந்தி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழில் ‘ஓ காதல் கண்மணி’யில் இடம்பெற்ற ‘மெண்டல் மனதில்’ பாடல் வழியாக ரசிகர்களுக்கு இவர் அறிமுகம் ஆனார்.
பிறகு ‘ஓஎம்ஜி பொண்ணு’, ’செல்லமா’, ’அரபிக்குத்து’, ‘பிரைவேட் பார்ட்டி’, ’ஜிமிக்கி பொண்ணு’, ‘பட்டாசா’, ‘ஏடி’ பாடல்கள் வழியாக ரசிகர்களை ஆட்டுவித்து வருகிறார்.
இந்தி, தெலுங்கு, உருது, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி எனப் பல மொழிகளில் பாடி வெற்றிகரமாகப் பயணித்து வரும் இவர் இசை மேடைகளில் பட்டாசாகத் தோன்றி வருகிறார். இசை ஆல்பங்கள், போட்டோ ஷுட்கள் என்று எங்கும் தனக்கான வசீகரத்தை அதிகப்படுத்தி நம்மை ஆச்சர்யப்படுத்தி வருகிறார் ஜோனிடா. இவரது இன்ஸ்டாகிராமை பார்த்தால் இதனை நிச்சயம் உணரலாம்.
சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியொன்றில், தனது பதின்ம வயது அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்திருக்கிறார். கனடாவில் இருந்தபோது சக மாணவர்கள் தன்னை நோக்கியது எப்படி என்று சொல்லியிருக்கிறார்.
“அந்த வயசுல பசங்க என்னை பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க. காட்ஸில்லான்னு தான் கூப்பிடுவாங்க. அதனால வளர வளர, என்னோட உடலை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். என்னால என்னை ஏத்துக்க முடியாதப்போ மத்தவங்க எப்படி ஏத்துப்பாங்க’ என்று அந்த நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
அதேநேரத்தில், உடல் குறித்த அவமானகரமான சிந்தனைகளில் இருந்து தன்னை மீட்டெடுக்க இசை உதவியதாகச் சொல்லியிருக்கிறார்.
“இசையில ஈடுபட்டப்போ, வாழ்க்கையில் வித்தியாசமா ஏதோ பண்றதா தோணுச்சு. என்னோட குரலைக் கேட்டதும் மக்கள் அழுதாங்க, சிலர் நடனமாடி என்ஜாய் பண்ணாங்க. அது என்னோட மனசை சாந்தமா ஆக்கிடுச்சு. இப்போ என் குரலுக்காக பல பேர் என்னை விரும்புறாங்க” என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோனிடா.
’இசை எப்போதுமே நம்மில் இருக்கிற நல்லவனவற்றைப் பூதாகரமாக்கும். உள்ளிருக்கும் அழகை வெளியுலகம் காணச் செய்யும்’ என்பதைத்தான் ஜோனிடா தனது வாழ்வில் வெளிப்படுத்தி வருகிறாரோ?! Jonita Gandhi worries boys